Tuesday, 3 September 2013

மனிதனை உயிர்ப்பிக்கும் வேத வசனம்...!


வேத வசனம் நம்முடைய வாழ்வில் எவ்வாறு வழி நடத்துகின்றது.. நம்மைத் தேற்றுக்கின்றது... வசனத்தினூடாக நம் தேவனாகிய கர்த்தர் வழி நடத்துவதை இதுவரை உணராமல் இருப்போமானால் நாம் வேத வசனத்தை சரிவர தியானிப்பதில்லை என்பதை சிந்திக்க வேண்டும். 
 
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  

கிறிஸ்தவர்களில் அநேகர் தொடர்ச்சியாக வேத வசனத்தை வாசித்து தியானிப்பதில்லை. வேதத்திலிருந்து விளக்கங்களை பெற விரும்பாமல் ஞாயிற்றுக் கிழமைகளில்  ஆராதனையிலும், பிரசங்கங்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள்

இவ்வாறு நாம் இருந்து விடுவோமானால் எமது வாழ்வை சாத்தான் தனக்கு சாதகமாக்கிக் கொள்வான். 

வேத வசனம் இன்று படித்து விட்டு நாளை மறந்துவிடவோ, இல்லது தூக்கி எறிந்துவிடக் கூடிய காகிதமோ அல்ல. ஆவியானவரின் தூண்டுதலோடு எழுதப்பட்ட ஜீவனுள்ள வார்த்தைகள். ஆயிரக்கணக்கான வருடங்கள் உருண்டோடினாலும் இன்றும் அது மனிதனை உயிர்ப்பிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

நாம் தொடர்ந்து வேதத்தில் பிரியமாய் இருந்து வாசிப்போமானால்,  தவறு செய்யும் பட்சத்தில் சரியான வசனம் உங்கள் ஞாபகத்திற்கு வந்து உங்களை எச்சரிக்கும், ஆறுதல்படுத்தும். வாழ்க்கை பாதையில் வசனம் உங்களை காப்பாற்றும். எத்தனை ஆவலோ வேதத்தை வாசிக்கிறோமோ அத்தனை ஆவலோடு தேவனும் நம்மோடு பேசுவார்.


வேத வசனம் நமது வாழ்வில் எவ்வாறு உறுதுணையாக அனுதினம் நம்மை வளரச் செய்கின்றது . நமக்கு ஆகாரமாய் விளங்குகின்றது.. 


மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55.10,12)


நிலத்தில் விதை விதைக்கும் போது, அது முளைவிட்டு செழிப்பாக வளர நீர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. வானத்திலிருந்து பொழிகின்ற மழை நீரானது  நிலத்தில் வீழ்ந்து விதை முளைக்க காரணமாயிருந்து, அது விதைத்தவனுக்கு நல்ல விளைச்சலைக் கொடுக்க வல்லதாக உள்ளது.  

 அதுபோலவே நமது தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளும் நமது வாழ்க்கையில் நாம் வளருவதற்கு ஏற்ற நல்லது கெட்டவைகளை உணர்த்தி நம்மை வளரச் செய்கின்றது. நமக்கு ஆகாரமாக விளங்குகின்றது.
அதுமட்டுமல்ல ஆண்டவருடைய வனசம் நமது கால்களுக்கு தீபமாய் விளங்குவதுடன், பாதைக்கு வெளிச்சாமாக இருக்கின்றது.  நம்மை செம்மையான வழிகளிலே நடத்திச் செல்கின்றது.

 ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் உருவாக்கும் போது களிமண்ணாகவே உருவாக்குகிறார். அவருடைய வேத வசனமே  நம்மை உயிர்ப்பித்து பெறுமதி மிக்கவர்களாக மாற்றுகிறது. 
உள்ளத்தில் வாஞ்சையோடு, தாகத்தோடு, பாரத்தோடும் வேத வசனங்களை வாசித்துதியானிக்க  வேண்டும்

நாம் வேத வசனத்தை தியானிக்கவோ வாசிக்கவோ எடுக்கும் போது சாத்தான் நம்மை தடை செய்வான். துன்பம், உபத்திரவம் வரும். எத்தகைய உபத்திரவமோ துன்பங்களோ வந்தாலும் ஆண்டவருடைய வசனத்தை விட்டுவிடவோ சோர்ந்துபோகவோ கூடாது. உலக கவலை, ஐஸ்வரிய இச்சை வரும். அவற்றையெல்லாம் விடுத்து நாம் கர்த்தருடைய வார்த்தையை வாசித்து தியானிக்க வேண்டும். 

இயேசு கிறிஸ்து வசனத்திற்கு முதலிடம் கொடுத்து வாஞ்சையோடு ஜெபம் செய்துள்ளதை வேதப் புஸ்தகம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.” (ஆதியாகமம்-2 :5,6)  

 இங்கு நாம் அவதானிக்க வேண்டிய  சொல் “பனி”- தேவனின் வசனத்திற்கு ஒப்பனையாக வருகிறது. அத்தோடு அளவில் சிறிதாயும் வெண்மை நிறமாயும் தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது என வேத வசனம் வர்ணிக்கப்படுகிறது. 

நாம் வேத வசனத்தை ருசித்து  உள்ளத்தோடு ஒன்றித்து வாசிக்க வேண்டும். ஆண்டவர் நம்மோடு கூடப் பேசுவார். 
நாம் புதிதாய் பிறந்த குழந்தையைப் போல, களங்கமில்லாத ஞானப்பாலாகிய வேதவசனத்தில் வாஞ்சையாய் இருக்க வேண்டுமென கூறப்படுகிறது.  புதிதாய்ப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே குழந்தைக்கு ஆகாரமாய் இருக்கும். குழந்தைகள் வளர வளர பால் குடிப்பதை மறந்து விடுகின்றன. ஆனால் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்ற குழந்தைகளைப் போன்று ஞானப் பாலாகிய வேத வசனத்தில் வாஞ்சையாய் இருக்க வேண்டும்.

“நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.”( 1 பேதுரு-2:3)

யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், ( உபாகமம் 33:13 ) என நமக்கு தெளிவு படுத்துகின்றது.

இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஓப்பாயிருந்தது. (யாத்திராகமம் 16:31)

வேதம் தேனிலும் இனிமையானது என சங்கீதப் புஸ்தகம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.. 
எவ்வளவோ இனிப்புள்ள பண்டங்கள் இருந்தாலும் நாம் வேத வசனத்தை வாசிக்க வாசிக்க அதன் மகத்துவத்தை அறந்து கொள்ளலாம்.

 பூக்களிலுள்ள தேனை தேனீக்கள் சுறுசுறுப்பாய்  சேகரிப்பதை போல நாமும் வேத வசனத்தை வாஞ்சையாய் வாசிக்க வேண்டும் 

தினந்தோறும் வேதத்தை கருத்தாய் வாசித்து,  ஜெபத்தொடு  தியானித்தால் ஆவியானவர் நம்மை வழி நடத்துவார். 

ஆமென். அல்லேலூயா..




வேதப் புத்தகத்திலிருந்து சில வசனங்கள்
உபாகமம்- 32:2 , 33:13

ஏசாயா 5:10,15

சங்கீதம்- 119: 89,105,160

எபேசியர்- 6:17

1பேதுரு 2:3, 1:23
மாற்கு 4:15
யாத்திராகமம்- 16:4,31
ஆதியாகமம்- 2: 6,5
சங்கீதம் 19:

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.  கோடான கோடி ஸ்தோத்திரம்..கர்த்தாவே இவ்வேளையில், உமது வசனங்களை தியானிக்கவும் அவற்றைக் கற்றுக் கொள்ளவும் நீர் செய்த கிருபைக்காக உமக்கு நன்றி. தகப்பனே வேதத்தைக் கருத்தாய் வாசித்து விளங்கிக்கொள்ள கற்றுத் தாரும். நாங்கள்  ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல, வெத வசனத்தில் பிரியமாய் இருந்து தியானிக்க, வாஞ்சையாயிருக்க கிருபை தாரும்.. புதிதாய் பிறந்த குழந்தையைப் போல, தினமும் வேதத்தில் பிரியமாய் இருக்க ஆசீர்வதியும்.. எங்கள் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுப்பவரே உமக்கு நன்றி.  ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். சகலதையும் செய்து முடிக்க வல்லவராய் இருப்பவரே உமக்கு நன்றி ராஜா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள பிதாவே. ஆமென்

No comments:

Post a Comment