Friday, 31 October 2014

ஆவியின் கனியோ.. நீடிய பொறுமை

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5: 22-23).

நான்காவது சுளை…….நீடிய பொறுமை:

நாம் அவசர உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது கொஞ்சம் தாமதித்தால் உடனே எத்தனை முறுமுறுப்புகள், எத்தனை முக கோணல்கள்!

சமீபத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வைத்தியரை பார்க்க வேண்டி இருந்தது. மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. அங்கிருந்த நர்ஸிடம், 'என்ன உங்க டாக்டர் ஒரு பேஷண்டை இத்தனை நேரம் பார்க்கிறார்? எத்தனை நேரம் காத்திருப்பது? பேப்பரை கிழித்துப் போட்டு நாங்கள் போகப் போகிறோம்' என்று சூடாக சொன்னபோது, அந்த நர்ஸ் 'இப்ப டாக்டர் உங்களை பார்ப்பார்' என்று சொல்லி, அழைத்துப் போனார்கள். அந்த டாக்டரை பார்த்தவுடன், அவர் பேசினதைக் கேட்டவுடன், ஏன் அப்படி கத்தினோம் என்று தோன்றியது. அத்தனை மெதுவாக, பொறுமையாக அந்த டாக்டர் பேசினார். நல்ல நண்பராக மாறினார்.

நம்மால் எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. டிராபிக் ஜாமில் வண்டியை ஓட்டும்போது, சிக்னலில் எத்தனை நேரம் காத்திருப்பது என்று முனகல்களும், முறுமுறுக்காமலும் நாம் இருப்பதில்லை. வீட்டில் சாப்பாடு கொஞ்சம் லேட்டானால் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. பொறுமை என்பதை இக்காலத்தில் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.

நம்முடைய தேவனின் தெய்வீக குணாதிசயங்களில் ஒன்றாக நீடிய பொறுமை விளங்குகிறது. பாவிகளாயிருக்கையில் நம்மேல் அவர் பொறுமையுள்ளவராக இருந்தாரே! உலகம் சென்றுக் கொண்டிருக்கிற பாதையை நோக்கினால், எத்தனை அக்கிரமங்கள், என்ன பயங்கரமான செயல்கள்! நம்மால் அதைப் பார்த்து,  பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எத்தனையோ முறை சொல்கிறோம், ஏன் ஆண்டவர் இவர்களை எல்லாம் விட்டு வைத்திருக்கிறார் என்று! ஆனால் அவையெல்லாவற்றையும் காண்கின்ற தேவன் அப்படி அக்கிரமம் செய்கிறவர்களையும் அழித்து விடாதபடி பொறுமையாயிருக்கிறாரே! அது நீடியப் பொறுமையல்லவா!

'தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்' (2 பேதுரு 3:9) என்று வேதம் கூறுகிறது. தேவன் அத்தனை பொறுமையுள்ளவராயிருந்தார் என்றால் நாம் எத்தனை பொறுமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

வேதத்தில் பொறுமையாயிருந்த ஆதி விசுவாசிகள் பலரைக் காண முடியும்! மோசே, ஆபிரகாம், யோசேப்பு, யோபு என்று பட்டியலை அடுக்கிக் கொண்டே போக முடியும்.. அவர்கள் பொறுமையாய் இருந்ததைப் போல புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடைய தேவைகளில், தேவன் ஏன் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கவில்லை என்று பொறுமையை இழந்துப் போகாமல், அவருடைய நேரத்திற்காக நீடிய பொறுமையோடு காத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 'கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்' (சங்கீதம் 40:1) என்று நாமும் சொல்ல முடியும்.

எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க ஆவியானவரின் பெலன் தேவை. அவர் கொடுக்கிற நீடிய பொறுமையாகிய கனியின் சுளை நம் வாழ்வில் இருக்கும்போது 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்கிற பழமொழியின்படி வெற்றி மேல் வெற்றி நம்மை வந்தடையும் என்பதி;ல் சந்தேகமேயில்லை.

'நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே' (யாக்கோபு 5:8) ஆமென் அல்லேலூயா!
நன்றி-அனுதின மன்னா

Wednesday, 29 October 2014

ஆவியின் கனியோ.. சந்தோஷம் பாகம்-3

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23)

இரண்டாம் சுளை சந்தோஷம்:

சந்தோஷம் என்றதும், நம் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை நாம் நினைக்கிறோம். உலகத்தில் சந்தோஷம் தருபவை எத்தனையோ இருக்கின்றன. பூக்களை பார்க்கும்போது, சிறு குழந்தைகள் நடப்பதை, பேசுவதை பார்க்கும்போது, சூரிய உதயத்தையும், முழு நிலாவையும் பார்க்கும்போது என்று நம் மனம் பூரிப்படைகிறது. நம் பிள்ளைகள் நல்ல மார்க் வாங்கி வரும்போது ஒரு சந்தோஷம், நாம் செய்த ஒரு காரியத்தை மற்றவர்கள் பாராட்டும்போது ஒரு சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்... ஆனால் எதுவும் நிரந்தரமானது இல்லை.

இத்தனை சந்தோஷங்கள் இருந்தும் வாழ்க்கை சில வேளைகளில் நமக்கு தருவது, வெறுமையும், விரக்தியும், கவலையும், கண்ணீரும்தான். உலகத்திலேயே எப்போதும் சந்தோஷமாயிருக்கிற மனிதன் ஒருவனும் இல்லை. ஒருவேளை மனநிலை சரியில்லாதிருந்தால் அவன் அந்த நிலைமையில் இருக்கக் கூடும்.

வேதத்திலும் நாம் சந்தோஷத்தைக் குறித்து அநேக வார்த்தைகள் இருப்பதைக் காணலாம். மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம், களிகூருதல் என்று நான்கு வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்' (சங்கீதம் 68:3). நீதிமான்கள்தான் இந்த நான்கு வகையான சந்தோஷமும் அடைவார்கள் என்று வேதம் கூறுகிறது.

'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்' (பிலிப்பியர் 4:4) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். அவர் எந்த நிலையிலிருந்து அப்படி கூறுகிறார் என்றால் எல்லாம் நன்றாக, மனரம்மியமாக இருந்தபோதல்ல, சிறையில் இருந்துக் கொண்டுதான் இந்த கடிதத்தை அவர் எழுதினார். அவர் சிறையில் இருந்தபோதும், அவர் மனம் சோர்ந்துப் போய் உட்கார்ந்து விடவில்லை, 'பாருங்கள் நான் கர்த்தருக்காக பாடுகள் பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறையில் வாடிக் கொண்டிருக்கிறேன்' என்று முறுமுறுத்துக் கொண்டு கடிதத்தை எழுதவில்லை, மாறாக வெளியில் இருக்கும் மற்றவர்களை சிறையில் இருந்துக் கொண்டே உற்சாகப்படுத்தினார். கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று உற்சாகப்படுத்தினார். என்ன ஒரு அற்புதமான கர்த்தருடைய அப்போஸ்தலன் அவர்!

பிரியமானவர்களே, நம் வாழ்வில் துக்கமான, துயரமான, தாங்க முடியாத பாரங்கள் அழுத்தும்போது, கண்ணீர் வடிப்பதும், இதிலிருந்து என்னை விடுவிப்பவர் யார் என்று கதறுவதும் சாதாரண மனிதனுடைய நிலைமையாகும். ஆனால் கர்த்தருக்குள் இருப்பவர்கள் அவர் கொடுக்கிற, ஆவியானவரால் உண்டாகிற சந்தோஷத்தால் நிறைந்தவர்களாக, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும், அவற்றை தாங்கக்கூடிய, அவற்றால் சோர்ந்துப் போய் விடாமல், கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, சந்தோஷமாக இருக்க முடியும்.

அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்' (அப்போஸ்தலர் 16:23-25). இந்த வசனங்களை பார்க்கும்போது, பவுலும் சீலாவும் பிசாசு பிடித்திருந்த ஒரு பெண்ணை சுகப்படுத்தினதால் அவள் மூலம் அவளுடைய எஜமானர்களுக்கு கிடைத்த வருமானம் போய் விட்டது என்று, அவர்கள், பவுல், சீலாவின்மேல் பொய்யாய் குற்றம் சாட்டி, அநேக அடிகளை அடித்து, சிறையில் அதுவும் உள்ளே இருக்கும் இருண்ட இடத்தில் காவலில் வைத்து, கால்களை தொழுமரத்தில் கட்டி வைத்திருந்தார்கள்.

இந்த நிலையிலும், அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள் என்று வேதம் கூறுகிறது. யார் பாடலை பாட முடியும்? சோகமாய், உலகத்தை வெறுத்தவர்கள் யாரும் எனக்கில்லை என்று அழுது வடிந்து பாடுவார்கள். இல்லையென்றால் சந்தோஷமாய் இருப்பவர்கள் பாடுவார்கள். பவுலும் சீலாவும் அழுது வடிகிற பாடலை அல்ல, தேவனை துதித்துப் பாடினார்கள் என்று பார்க்கிறோம். அப்படியென்றால் ஆவியானவர் கொடுக்கிற, எந்த சூழ்நிலையிலும் மாறாத சந்தோஷத்தினால் நிறைந்தவர்களாக அவர்கள் உள்ளம் நிறைந்திருந்தபடியால் அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள். அல்லேலூயா!

நம்மைப் போல மனிதனாக இருந்த பவுலினால் பயங்கரமான சூழ்நிலையிலும் சந்தோஷமாயிருக்க முடியுமென்றால், அவருக்குள் இருந்த ஆவியானவர் அவரை தேற்றி, திடப்படுத்தி, சந்தோஷத்தினால் நிறைத்திருந்தார். நாமும் நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள், போராட்டங்களில் சோர்ந்துப் போகாமல், சந்தோஷமாய் அவற்றை சந்தித்து, கர்த்தருக்குள் களிகூருவோமா! ஆவியின் இரண்டாம் சுளையாகிய சந்தோஷத்தினால் நாம் எப்போதும் நிரம்பியிருப்போமா? 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்'

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Tuesday, 28 October 2014

ஆவியின் கனியோ அன்பு...பாகம் 2

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23).
முதலாம் சுளை அன்பு:


அன்பு என்ற சொல்லுக்கு நான்கு சொற்கள் கிரேக்க மொழியிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பிலியோ என்பது சிநேகிதருக்குள் காண்பிக்கப்படும் அன்பு. ஈரோஸ் என்பது கணவன் மனைவியிடைய காண்பிக்கப்படும் அன்பு. ஸ்டார்க்கே என்பது குடும்பத்தில் உறவினர்கள் மத்தியில் காண்பிக்கப்படும் அன்பு. அகப்பே என்பது தெய்வீக அன்பு என்பதாகும். கர்த்தர் நம்மிடத்தில் வெளிப்படுத்தியது அகப்பே அன்பாகும்.

தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் நமக்கு கூறுகிறது. அந்த அன்பினாலேதான் 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' (யோவான் 3:16) என்று அவருடைய அளவில்லாத அன்பை காண்கிறோம்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8). கிறிஸ்து நம் மேல் வைத்த அன்பினாலே தம் ஜீவனையும் பாராமல், பாடுகளையும் வேதனையையும் சகித்து, சிலுவையிலே நமக்காக மரித்தார். மீண்டும் உயிர்த்து, நமக்காக ஒரு வீட்டை பரலோகத்தில் ஆயத்தம் செய்ய போயிருக்கிறார். நம்மை அழைத்துச் செல்ல மீண்டும் வருவார். ஆமென்.
ஆவியானவரின் கனியாகிய அன்பு இப்படி பிதா, குமாரன், பரிசுத்தஆவியானவராகிய திரியேக தேவன் நம்மேல் அன்பு வைத்திருக்கும்போது, நாமும் அவர் மேல் அன்புக்கூர கடனாளிகளாயிருக்கிறோம். அவரிடத்தில் இருந்து பெற்ற அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்கும்போது, மற்ற அன்புகளைவிட தெய்வீக அன்பை காண்பிக்கும்போது தேவன் அங்கு மகிமைப்படுகிறார்.

கார்லும், ஈடித்தும் கணவன் மனைவியாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு பிள்ளையில்லை. ஆனால் இருவரும் ஒருவரிலொருவர் அன்பு நிறைந்தவர்களாக, 23 வருடங்களாக குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். கார்ல் அரசாங்கத்தில் வேலையில் இருந்தபடியால், அவருக்கு வேறு இடத்திற்கு சென்று அலுவலை முடித்து வரும் நிலைமை இருந்து வந்தது.

ஒருமுறை அவருக்கு ஜப்பானில் உள்ள ஒக்கினாவா என்னுமிடத்தில் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதினால் அங்கு சென்ற அவரிடம் இருந்து கடிதம் வருவது திடீரென்று குறைந்தது. முன்பெல்லாம் வேறு இடம் சென்றால் அடிக்கடி கடிதம் எழுதுபவர், இப்போது குறைத்துக் கொண்டாரே, ஒருவேளை வேலைப்பளு அதிகமாயிருக்கும் என்று ஈடித் நினைத்துக் கொண்டார்கள்.

ஒருநாள் அவரிடமிருந்து கடிதம் வந்தது, 'நம் திருமண வாழ்வு முடிந்து விட்டது' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அவர் அங்கு ஐக்கோ என்னும் பத்தொன்பதே வயது நிரம்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது. பெரிய இடியைப் போன்று இந்த செய்தி வந்தபோதும், ஈடித் கர்த்தரை விசுவாசிக்கிற சகோதரியாக இருந்தபடியால், அவர்கள் மேல் கோபப்படாமல், பரிதாபப்பட்டார்கள். எப்போதும் தன்னையே சார்ந்து ஜீவிக்கிற தன் கணவன் இப்போது என்ன செய்வார் என்று.

கார்லிடமிருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்ததாக கடிதம் வந்தது. இந்த சகோதரி அந்த பிள்ளைகளுக்கு பரிசுகள் வாங்கி அனுப்பினார்கள். சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கு கடிதம் வந்தது, நுரையீரல் கேன்சரினால் கார்ல் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், பணம் கட்டுவதற்கு இல்லாமல் அவதிப்படுவதாகவும் வந்த செய்தியைக் கேட்டு, பணத்தையும் அனுப்பி வைத்தார்கள்.

சிகிச்சை பலனளிக்காமல் கார்ல் இறந்தப்பின் ஈடித் ஐக்கோவின் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கச் சொல்லி ஐக்கோவிற்கு கடிதம் எழுதினார்கள். ஐக்கோவிற்கு கஷ்டமாயிருந்தாலும், பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து, அனுப்பி வைத்தாள். இந்த பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தபோது, ஈடித் தனக்கு வயதாகிக் கொண்டே போவதால், பிள்ளைகளை கவனிப்பதற்கு அவர்களின் தாய் இருந்தால் நலமாக இருக்கும் என்று நினைத்தார்கள். இவர்களின் அற்புதமான மன்னிப்பின் கதையை செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தபடியால், அது அரசாங்கம் வரை தெரிவிக்கப்பட்டு, ஜப்பானிலிருந்து அமெரிக்கா வர முடியாதிருந்த ஐக்கோவிற்காக விசேஷித்த முறையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு, ஐக்கோ அமெரிக்கா வந்து சேர்ந்தாள்.

விமான நிலையம் வந்து சேர்ந்த ஐக்கோவை 'நீதான் என் திருமண வாழ்வை நாசமடைய வைத்துவிட்டாய். நீ என்னுடைய வாழ்க்கை, என் சுகம், என் சம்பாத்தியம் எல்லாவற்றையும் நாசப்படுத்தி விட்டாய்' என்று கோபப்பட காரணங்கள் இருந்தாலும், எந்தவித கோபமும் கொள்ளாமல், அந்த பெண்ணை கட்டி அணைத்து முத்தமிட்டு, ஏற்றுக் கொண்டார்கள். அந்தப்பெண் அவர்களின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

நிபந்தனை அற்ற அன்பின் உதாரணமாக இந்த உண்மை சம்பவம் காணப்படுகிறது. கிறிஸ்து நம்மீது அன்பு வைக்க, நமக்காக ஜீவனை கொடுக்க எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ள எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாமும் எந்த நிபந்தனையும் இல்லாதவர்களாக அவருடைய அன்பை மற்றவர்களுக்கு செலுத்தவேண்டும் என்பது அவருடைய எதிர்ப்பார்ப்பு. அப்படிப்பட்ட கனியை நாம் தரவேண்டும் என்றுதானே அவர் நம்மை ஏற்படுத்தினார்?

எந்த சூழ்நிலையிலும், எந்த பிரச்சனை நேரத்திலும், எந்த அமைதியற்ற இடத்திலும் நிபந்தனை அற்ற அன்பை வெளிப்படுத்துவோமா? அப்படியான அன்பை நாம் வெளிப்படுத்தும்போது, நம்மை காண்பவர்கள் நம்மில் கிறிஸ்துவை காண்பார்கள். அப்படிப்பட்டதான அன்பில் வளர தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Monday, 27 October 2014

ஆவியின் கனியோ...!

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை -(கலாத்தியர் 5:22-23).

வேதத்தில் ஆவியின் கனி என்று ஒருமையில் சொல்லிவிட்டு, அதன்பின் ஒன்பது குணாதிசயங்களைக் குறித்து இந்த வசனம் விவரிக்கிறது. ஒரு கனியில் எப்படி இத்தனை கனிகள் இருக்க முடியும்? ஒரு ஆரஞ்சு சுளைக்குள் சுளைகள் இருப்பதுப் போல ஒரு பழத்திற்குள் இருக்கும் சுளைகளாக இந்த குணாதிசயங்கள் காணப்படுகிறது.

இதை கொடுப்பவர் ஒரே ஆவியானவர். அவர் ஆவிக்குரிய கனியை ஒருபுறமும், ஆவிக்குரிய வரங்களை ஒருபுறமும் கொடுக்கிறார். ஒரு பறவை பறப்பதற்கு எப்படி இரண்டு இறக்கைகள் தேவைப்படுகிறதோ அதுப்போல ஒரு பக்கம், ஆவியின் கனியும், மறுபுறம் ஆவியின் வரங்களும் நாம் கர்த்தருக்குள் வளர, அவரோடு உயர்ந்த அனுபவத்திற்குள் பறப்பதற்கு தேவையாக இருக்கிறது.

சிலருடைய வாழ்க்கையில் இயற்கையாகவே ஆவியின் கனி காணப்படலாம். மற்ற மதத்தினவரிடமும் இதுப் போன்ற கனி காணப்படலாம். ஆனால் ஆவியின் கனி என்பது பரிசுத்த ஆவியானர் நம்மில் ஊற்றப்பட்டு, கனிகளே இல்லாத ஒருவரின் வாழ்வில் இந்த ஒன்பது குணாதிசயங்களையும் வெளிப்படுவதே ஆகும்.

அநேகர் சாட்சி சொல்வதைக் கேட்டிருக்கிறேன். 'நான் வாலிப வயது வரை என் விருப்பம் போல நடந்தேன், ஒரு நாள் கர்த்தர் என்னை சந்தித்தார். அவருடைய பிள்ளையாய் என்னை மாற்றினார். அவர் என்னுள்ளத்தில் வந்தப்பின்பு என்னுடைய சுபாவம் மாறிற்று, கர்த்தருடைய குணாதிசயங்கள் என்னில் நிரம்பி, மற்றவர்களுக்கு அவற்றை வெளிப்படுத்த தேவன் கிருபை செய்தார்' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆம், ஆவியானவர் நமக்குள் வரும்போது, நம்முடைய மாம்ச சுபாவங்களும், மாம்ச கிரியைகளும் அழிந்து, கர்த்தருடைய சுபாவங்களும், ஆவியானவரின் கிரியைகளும் நமக்குள்ளிருந்து வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அப்படி வெளிப்படவில்லை என்றால் நம்முடைய இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே!

'...நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்' (யோவான் 15:16) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? ஆம் நாம் கனி கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். நம்மிடத்தில் தேவன் வந்து பார்க்கும்போது கனி இல்லாதிருந்தால் நம் நிலை பரிதாபத்திற்குரியதே!

சில நேரங்களில் 'என் கணவர் இப்படி இருக்கிறார், என் மனைவி இப்படி இருக்கிறாள், அவளிடத்தில், அவரிடத்தில் என் கனியை காட்டுவது என்பது ஒருபோதும் நடக்காத காரியம்' என்று நாம் நினைக்கிறோம். நாம் அந்த இடத்தில் கனிக் கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். வேறு சிலர் 'நான் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்களுக்கு என் கனியை நான் வெளிப்படுத்த முடியாது. அப்படி வெளிப்படுத்தினாலும் எல்லாமே வீண், அவர்கள் அதை புரிந்துக் கொள்ள மாட்டார்கள்' என்று நினைக்கிறோம். அவர்கள் மத்தியில் நாம் கொடுக்கும் கனியே மிகவும் சிறந்தது. அந்த கனியே பலன் கொடுக்கக்கூடியது.

தேவன் நம்மை ஏற்படுத்தினதின் ஒரு காரணம் நாம் கனிகொடுக்கும்படிககும், அது நிலைத்திருக்கும்படிக்கும் என்று நாம் அறிந்துக் கொண்டோம். அதினால் அது எத்தனை முக்கியமானது என்றும் அறிவோம். ஆகையால் நாளையிலிருந்து ஆவியின் கனியாகிய ஒன்பது பலரச, பரவச சுவைகளால் நிரம்பியிருக்கும் சுளைகளை ஒவ்வொரு நாளும் ஒரு சுளையாக அனுதின மன்னாவில் ருசித்துப் பார்த்து, நம் வாழ்வில் அந்த சுவையான சுளைகள் இருக்கிறதா என்று சோதித்து, கனி கொடுக்கிறவர்களாக நாம் மாறுவோமாக!
ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Saturday, 25 October 2014

இயேசுவோடு தொடர்புடைய வாழ்க்கை - பேதுருவாய் மாறிய சீமோன்

இயேசு சீடர்களின் கால்களை கழுவியத்தின் மூலமாக, சீடர்கள் தாழ்மையை கற்றுகொண்டனர். பின்னர் இயேசு தாம் சிலுவையில் மரிக்க வேண்டிய தருணம் வந்தமையால், "பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று" என்றார். பேதுரு அவரை நோக்கி: "ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்" என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: "எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

பின்னர் இயேசு சீடருடன் கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்குவந்து, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், "என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள்" என்று சொன்னார். இயேசு வியாகுலப்பட்டு ஜெபிக்கையில் சீடர்கள் தூங்கினார்கள். இயேசு பேதுருவை நோக்கி "சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணி நேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?" என்றார். எப்பொழுதெல்லாம் பேதுரு தவறு செய்தாரோ அப்பொழுதெல்லாம் இயேசு பேதுருவை "சீமோன்" என்று பழையபெயரை சொல்லி எச்சரித்தார்.

சிறிது நேரத்திற்குள்ளாக காட்டி கொடுக்கும் யூதாஸ் உடன் ஒரு கூட்டம் வந்து இயேசுவைப் பிடித்தனர். பேதுரு தன்னுடைய உரையிலிருந்து கத்தியை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்கரனாகிய மல்கூசின் வலது காதை வெட்டினார். இயேசு அந்த கதை ஒட்டி குணப்படுத்தினார். பேதுரு காட்டிய சிறிது நேர துணிவின் விளைவு அவரை கோழைத்தனத்திற்க்கு வழி காட்டியது. முதலில் பேதுரு இயேசுவை தூரத்தில் பின் தொடர்ந்து பிரதான ஆசாரியன் அரண்மனை முற்றம் வரை சென்றார்.
யோவானைப்போல இயேசுவின் அருகே நிற்க வேண்டியவர், இப்படி வெளிய நின்ற கூடத்தில் ஒருவறாய் குளிர் காய்ந்து கொண்டு இயேசுவையும் மூன்று முறை மறுதலித்து சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினார். உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதார். இயேசுவின் சிலுவை மரணமும், தமது இறுதி மறுதளிப்பும் பேதுருவை மிகவும் பாதித்தது. "அழுகை அழுக்கை கழுவும்" என்பது நல்மொழி. மனம்கசந்து அழுதமையால் அழுக்கு நீங்கி சுத்தமானார் பேதுரு.

இயேசு உயிர்த்தெழுந்த நாளன்று காலையில், விழுந்து போன ஆவியுள்ள பேதுருவுக்கு ஒரு உற்சாகமான வார்த்தை காத்திருந்தது. ஒரு தேவ தூதன் கல்லறையிலிருந்து, "அவருடைய சீடரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய் சொல்லுங்கள்" என்றான் (மாற்கு 16:6-7). தனிப்பட்ட பேதுருவின் பெயரைக் கூறியதின் மூலம் இயேசு தன்னை மன்னித்தார் என்று உற்சாகம் கொண்டு கல்லறைக்குள் ஓடினார். இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதை உணர்ந்து கொண்டார். பின்னர் சாயங்கால வேளையில் சீடர்களுக்கு காட்சி தந்தார். பின்பு ஒருநாள் ஏழு சீடர்கள் பேதுருவின் தலைமயில் மீன்பிடிக்க கலிலேயா கடலுக்குள் சென்றனர்.

"விடியற்காலமானபோது, இயேசு கலிலேயா கடலின் கரையிலே கரி நெருப்பு போட்டு அப்பதொடும் மீன்களோடும் காத்து நின்றார். அவரை இயேசு என்று, சீடர்கள் தாமதமாகவே அறிந்து கொண்டார்கள். இயேசு, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று மூன்று முறை கேட்டார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றான். இயேசு பேதுருவை நோக்கி: "என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்று சொல்லி திருசைபையை பேதுருவிடம் இறை ஒப்படைப்பு செய்தார். இவ்வளவு தடுமாற்றம் மற்றும் பின்மாற்றங்களுக்கு பின்பதாக சீமோன் இப்பொழுது பேதுருவாய் (கேபாவாய்) பாறை போன்று திடமுள்ளவராய் மாறியிருந்தார்.

பேதுருவின் வாழ்க்கை வரலாறு நாளைய தினம் தொடரும்..!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Friday, 24 October 2014

காலை நேரம் இன்ப ஜெப தியானமே

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை  எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். - (சங்கீதம் 143:8).
.
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.
.
வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். 'ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்' என்றனர். 'வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்' என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவாகளுக்கொல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார்.  'நான் சிறு பையனாக இருககும் போது காடுகளில் விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தேன். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்' என்றார்.
.
நாம் முதலில் யாரோடு பேசுகிறோம்? அன்றைய செய்தி தாளுடனா? அல்லது தொலைகாட்சி பெட்டியுடனா, அல்லது மற்றவர்களுடனா? யாருடன் முதலில் பேசுவீர்கள்? அதிகாலையில் எழும்பும் பழக்கம் உண்டா? தொலைபேசி அழைப்போ, அல்லது யாரோ எழுப்பிதான் நீங்கள் எழுவதுண்டா? இவர்கள் உங்களை எழுப்புவதற்கு முனபே தேவனோடு உறவாடி, அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்பீர்களானால் தூங்கி வழிந்த முகத்தோடு அல்ல, புன்சிரிப்போடு எழுந்தரிப்பீர்கள். யாரையும் புன்சிரிப்போடு சந்திப்பீர்கள். அந்த நாளின் எல்லா காரியங்களிலும் நிதானத்தோடு யோசித்து செயல்படுவீர்கள். அன்று வரும் பிரச்சனைகளினால் பதற்றப்பட்டு உங்க்ள சமாதானத்த இழக்க மாட்டீர்கள். கர்த்தரை நம்பி அவர் பொறுப்பில் விட்டு விடுவீர்கள்.
.
ஆம், அதிகாலை நேரத்தை அன்பருடன் செலவிடுவது ஒரு இன்பமான வேளை. 'என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்' (நீதிமொழிக்ள 8:17-21). இந்த இடத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி கூறப்பபட்டுள்ளது. அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் என்றுஇயேசுகிறஸ்து கூறுகிறார். அப்படி அவரை அதிகாலையில் தேடி கண்டடையும்போது, அவர்களை ஆசீர்வாதத்தின் ஊற்றுகளாக தேவன் மாற்றுகிறார். ஐசுவரியமும் கனமும், நிலையான பொருளும், நீதியும் அவர் நமக்கு கொடுத்து, நம்முடைய களஞ்சியங்களை நிரப்பி, நீதியின் பாதைகளில் நம்மை நடத்துகிறார்.
.
உலக மனிதர்கள் யாருடனும் பேசும் முன்பே உலகை படைத்த தேவனுடன் பேசுவது எத்தனை பாக்கியம்! அந்த நாளை அவருடைய பொற் பாதத்தில் சமர்ப்பித்து, அந்த நாளுக்குரிய கிருபைகளை பெற்று கொண்டு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருக்கும் கிருபை தருவாராக!
 ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Wednesday, 22 October 2014

நீ வா.. நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன்

எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். அப்போஸ்தலர் 7:34

சென்ற மாதத்தில் வெள்ளக்கோயில் பகுதியில் இருக்கும் காங்கயம் என்ற கிராமத்திற்கு இயேசுவின் அன்பை சொல்லும் படியாய் குழுவாக சென்றிருந்தோம். வயதான பாட்டி ஒருவரிடம் இயேசுவின் அன்பை சொல்லும் பொழுது அவர் தனது உடலில் இருக்கும் பெலவீனங்களை என்னிடம் கூறினார். உங்களுக்காக நான் ஜெபிக்கட்டும்மா என்று நான் கேட்டேன். உடனே அவர் ஜெபம் என்றால் என்ன என்று கேட்டார்கள். அப்பொழுது நான் சொன்னேன் கடவுளிடம் வேண்டுவது என்று சொன்னேன். சற்று கலக்கம் அடைந்த அந்த பாட்டி அதற்க்கு காசு எதுவும் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டார்கள். அதேல்லாம தேவையில்லை என்று சொல்லி அவருக்காக ஜெபித்துவிட்டு வந்தேன். இயேசு என்றால் ஒரு தெய்வம் என்பதை மட்டும் தான் அநேக கிராம மக்கள் அறிந்திருகின்றாகள். அவர்கள் இன்றளவும் எகிப்து எனும் பாவ உலகத்தில் சிக்கி, உபத்திரவங்கள் மத்தியில் பெருமூச்சோடு வாழ்கின்றாகள். அவர்களை விடுவிக்கும் படி இயேசு ஆவலுடன் இருகின்றார். நீங்கள் பிறருக்கு இயேசுவை அறிவித்து அவர்களை விடுவிக்க முன்வந்தால், முதலாவது உங்களுடைய வாழ்க்கையில் பூரண விடுதலை கிடைக்கும். நீங்கள் அநேக நாட்கள் ஜெபித்தும் விடுதலை இன்றி தவிகின்றீர்களா? நீங்கள் விடுதலை பெறுவதோடு மட்டுமன்றி நீங்கள் அநேகரை விடுவிக்கப் போகின்றீர்கள்.

"சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுகிறார் என்றார்" (ஆகாய் 2:23). ஊழியம் என்றால் அழிகின்ற ஆத்துமாக்களுக்காக பாரத்தோடு ஜெபித்து வேதத்தில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் அன்பை பிறருக்கு சொல்வது ஆகும். இதை செய்வதற்கு உங்கள் உள்ளத்தில் அழிகின்ற மக்களைக் குறித்த பாரம் இருந்தால் போதும். நீங்கள் கண்ணீரோடு ஜெபிக்க தொடங்குவீர்கள். பின்னர் கர்த்தர் தாம் விடுவிக்க சித்தம் கொண்டுள்ள மக்களை உங்களிடம் கொண்டு வருவார். இயேசுவே அநேக மக்களை மீட்கும் படியாக ஊழியம் செய்திருக்கின்றார் (மாற்கு 10:45) என்றால் நாமும் அவ்வாறு ஊழியம் செய்ய வேண்டியது எவ்வளவு நிச்சயம்.

ஆமான் என்ற வஞ்சகன் தீட்டிய சதித்திட்டத்தால் யூத இனமே அழியும் நிலை வந்தது. எஸ்தரிடம் மொர்தெகாய் எச்சரிக்கின்றார், 'நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே" (எஸ்தர் 4:14). ஒருவேளை நீங்கள் இராஜ மேன்மை கிடைத்தது என்று சந்தோஷமாக மற்றவர்களை மறந்து ஜீவித்தால், யூதருக்கு இரட்சிப்பு வேறு இடத்திலிருந்து கர்த்தர் அனுப்புவார். அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்களே? ஒரு வினாடி சித்திக்க கூடாதா? அன்றைக்கு எஸ்தர் தன் ஜீவன் போனாலும் பரவாயில்லை என்று மக்களுக்காக ஜெபித்து செயல்பட்டபடியால், ஆமானின் சதி திட்டத்திலிருந்து யூத ஜனங்களுக்கு விடுதலை கிடைத்தது.

இயேசுவும் மக்களின் உபத்திரவத்தை பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்குகின்றார்; ஆகையால், நீ வா நான் உன்னை அனுப்புவேன் (அப் 7:34) என்று இயேசு உங்களை அவருடைய பணியை செய்யும் படியாக அழைகின்றார். நீங்கள் அழைப்பை ஏற்று அழிகின்ற மக்களுக்காக பாரத்தோடு ஜெபித்து, இயேசுவின் அன்பை சொல்ல உங்களை அர்ப்பணித்தால், நீங்கள் இயேசுவின் கையிலே முத்திரை மோதிரமாக மாறுவீர்கள். ராஜாவின் கையிலே இருக்கும் முத்திரை மோதிரம் சகல அதிகாரத்திற்கும் வல்லமைக்கும் உரியது. அதே போல கர்த்தர் உங்களை மாற்றப் போகின்றார். நீங்கள் வசிக்கின்ற இடத்தில், குடும்பத்தில், சசமுதாயத்தில் இயேசுவுக்காக சாட்சியாக வாழ்ந்து, அவரை அறிவிக்கும்போது அழிந்து போகும் மக்கள் பாதுக்காக்கப்படுவார்கள். ஜெபித்து அர்ப்பணிபீர்களா?

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Thursday, 16 October 2014

கிறிஸ்த்துவின் அன்பிலே நிலைத்திருத்தல்






நமது தனிப்பட்ட ஜெபத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஏழு ஜெபகுறிப்புகளை குறித்து தியானித்து வருகின்றோம் (எபேசியர் 3: 15-19). முதல் மூன்று ஜெப விண்ணப்பங்களாகிய "உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படுதல்", "கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருத்தல்", மற்றும் "நீங்கள் கிறிஸ்த்துவின் அன்பிலே வேரூன்ருவதைக்" குறித்து தியானித்தோம். இன்றைக்கு "நீங்கள் கிறிஸ்த்துவின் அன்பிலே நிலையாக நிற்க வேண்டும்" என்ற நான்காவது ஜெப விண்ணப்பத்தைக் குறித்து தியானிக்கலாம். ஒரு மரம் உருவாக விதையும், அது நிலைத்து நிற்க வேரும் மிகவும் அவசியம். வேத வசனம் விதையாகவும், நாம் இயேசுவின் மீது வைக்கும் அன்பு ஆணிவேர் போன்றும் இருகின்றது.

விதை:

இயேசு கூறிய உவமைகளில் மிகவும் முக்கியமானதாக காணப்படுவது மத்தேயு 13:23-ல் "நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான்." என்ற உவமை. அட்டவது வசனத்தை கேட்டு அதன்படி வாழ தன்னை அர்ப்பணிக்கிற ஒவ்வொரு மனிதனும் நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பாக இருக்கின்றான் என்று கூறுகிறார். அப்படியானால் வசனத்தை கேட்கின்ற, படிகின்ற ஒவ்வொரும் விதைக்கு ஒப்பானவர்கள்.

செடி:

நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள விதையானது எப்போது தன்மீது தண்ணீர் படும் நான் எப்பொழுது எனக்கு மேலிருக்கும் தடைகளை கடந்து செடியாய் மாறுவேன் என்று நிலத்திற்குள் ஏங்கிக்கொண்டிருக்கும். ஏசாயா 27:3-ல் கர்த்தர் சொல்கிறார் "கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்." தண்ணீர் என்பது பரிசுத்த ஆவியானவர் நம்மேல் அசைவாடுவதை குறிக்கின்றது. வசனத்தை கேட்டு விதையாக மாறிய நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மேல் பொழியும்படி தாகத்தோடு அவரிடம் கேட்க்க வேண்டும். தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரல்லவா நம் கர்த்தர். அவ்வாறு அவர் நம்மேல் அவருடைய ஆவியை பொழியும் பொழுது விதையாக இருந்த நாம் செடியாக வளருகின்றோம்.

மரம்:

விதையானது தற்போது தனக்கு மேலிருந்த மணல்போன்ற தடைகளை எல்லாம் தகர்த்து செடியாய் வளர்ந்து விட்டது. தற்பொழுது இந்த செடிக்கு அநேக வகைகளில் ஆபத்து நேரிடும். நிலத்தில் நடந்து செல்பவர்களோ அல்லது அந்த வழியில் செல்லும் ஆடு, மாடு போன்ற மிருகங்களோ செடியினை மிதிக்ககூடும். ஏதாவது பறவைகள் கொத்தி அழிக்ககூடும். அல்லது பலவித பூச்சிகளினால் பாதிப்பு ஏற்ப்படும். இந்த சமயத்தில் செடியானது, தோட்டத்து எஜமான் தன்னை பாதுகாப்பார் என்று சொல்லி அவரையே முழுமையாக நம்பி வாழுகின்றது. தோட்டத்து எஜமான் ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வார். இப்படியாக செடியானது மரமாக வளருகின்றது. வசனத்தை கேட்டு விதையாகிய நாம், பரிசுத்த ஆவியானவரின் பொழிதலினால் செடியாக மாறி, கர்த்த்தர் இரவும் பகலும் நம்மை காத்தபடியால் மரமாகின்றோம்.

கனியுள்ள மரம்:

விதையாக இருந்த நம்மை செடியாக மாற்றி, இரவும் பகலும் கண்ணின் மணி போல காத்து, நம்மை மரமாக மாற்றிய இயேசு நம்மிடத்தில் இருந்து ஆவியின் கனிகளான "அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" (கலாத்தியர் 5:22-23)போன்ற கனிகளை எதிர்பார்கின்றார். நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 7:18-20) என்று நம்மை எச்சரிக்கவும் செய்கின்றார். மரம் என்றைக்கும் தனது கனியை தானே சாப்பிடுவதில்லை. அதின் கனிகள் பிறருக்கு பயனுள்ளதாகவே இருக்கின்றது. ஆவியின் கனி அன்பு என்றவுடன் நாம் அன்பாக இருந்து கிறிஸ்துவின் அன்பை சுவைப்பது அல்ல. கிறிஸ்துவின் பிறருக்கு சொல்ல வேண்டும். அதுபோல தான் ஒன்பது கனிகளையும் நாம் சுவைத்து இன்பமாய் வாழ்வதற்கு அல்ல. அதை கிறிஸ்துவை அறியாத ஜனங்களுக்கு கொடுத்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதர்க்கே.

ஒரு நிமிடம் நம்மை நாமே நிதானித்து பார்ப்போம். நாம் ஒருவேளை வேதத்தை மட்டும் வாசிப்பவர்களாக இருந்தால் விதையாகவே உள்ளோம். சபை ஆராதனைளும், மற்றும் சிறப்பு கூட்டங்களில் மட்டும் ஆவியில் நிறைபவர்களாக இருந்தால் நாம் செடியாக இருக்கின்றோம். அனுதினமும் வேதம் வாசித்து, எல்லா காவலோடும் இருதயத்தை காத்து, ஆவியில் நிறைந்து ஜெபித்தால் நாம் மரமாக உள்ளோம். அனுதினமும் வேதம் வாசித்து, ஆவியில் நிறைந்து ஜெபிப்பதோடு அல்லாமல் நாம் ருசித்த கிறிஸ்த்துவின் அன்பை பிறருக்கு சொல்லும் பொழுது நாம் நமது கனியை பிறருக்கு கொடுப்பவர்களாக உள்ளோம். இயேசு கிறிஸ்து "இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன் என்றார். மறுநாள் காலையிலே சீஷர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள் (மாற்கு 11:13-20). அத்திமரம் யூதர்களின் அரசியல் மேன்மையை குறிகின்றது. நீங்கள் கனி கொடுக்கும் மரமாக வாழவில்லை என்றால் இயேசுவை அப்பா என்று கூப்பிடும் மேன்மையான இடத்தில் இருந்து தள்ளப்படுவீர்கள். நீங்கள் வேத வசனத்தை ஏற்றுக்கொண்டு கனிகொடுக்கும் பொழுது, கண்ணீரும் கவலையும் மாறி உங்கள் வாழ்க்கை செழிப்புள்ளதாக மாறும்.



கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள் 

Wednesday, 8 October 2014

தேவனால் பெற்ற அபிஷேகம் - பாகம் - 1

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. - (1 யோவான் 2:27).

இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்றால் என்ன என்பதை அநேகர் புரியாமலும், குழப்பத்திலும் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் ஆவியானவரின் அபிஷேகத்தை குறித்து என்றுமில்லாத அளவில் பேசப்படுகிறது. அதைக் குறித்து தேவ வார்த்தைகளின் உதவியுடன் நாம் காண்போம்.

அபிஷேகம் என்ற வார்த்தை ‘எண்ணெய் பூசுதல்’ என்ற பொருளில் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஒருவரை ஒரு சிறப்பான பணிக்கு நியமிக்கும்போது அதிகார பூர்வமாக அங்கீகரித்ததற்கு அடையாளமாக எண்ணை பூசப்பட்டது அல்லது எண்ணெய் தலையில் ஊற்றப்பட்டது.

ஆசாரியர்கள் அபிஷேகிக்கப்படனர், ராஜாக்கள் அபிஷேகிக்கப்படடனர். தீர்க்கதரிசிகள் அபிஷேகிக்கப்படடனர். இந்த எண்ணெய் அபிஷேகம் புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியின் நிறைவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிட்ட சிலமக்கள் மேல் வந்து இறங்கினார். ஆனால் இந்த கடைசிக் காலத்தில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று வாக்குதத்தம் செய்த ஆண்டவர், எல்லா மனிதர் மேலும் இன்று ஊற்றிக் கொண்டிருக்கிறார். யோவேல் 2:28,29, ஏசாயா 28:11,12, ஏசாயா 32:15 போன்ற வசனங்கள் அவற்றை நமக்கு தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

அந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவாக திருச்சபையின் ஆரம்ப நாளான பெந்தேகோஸ்தே என்ற யூத பண்டிகை நாளில் பரிசுத்த ஆவியானவர் இறங்கிவந்;தார். பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள் (அப்போஸ்தலர் 2:1-4).

சரி, பரிசுத்த ஆவியானவரின் அப்ஷேகம் எவ்வளவு முக்கியமானது என்றால், உலகமெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்று கட்டளையிட்ட இயேசு தமது அப்போஸ்தல சீடர்களுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெறாமல் ஊழியத்திற்கு போக வேண்டாம் என்று கட்டளையிட்டார். வெறும் ஆலோசனையாக கூறாமல், கட்டளையிட்டார். 'அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்' (அப்போஸதலர் 1:4,5) முக்கியமில்லாத ஒன்றை பெற இயேசு கட்டளையிடுவாரா? கிறிஸ்தவ வாழ்விற்கும் ஊழியத்திற்கும் இது மிக முக்கியமானது.

மனிதனாய் இந்த உலகத்தில் வந்த தேவனாகிய இயேசுகிறிஸ்து தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்று ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப் போல அவர் மேல் இறங்கினார் (லூக்கா 3:21,22). அவரும் இந்த அனுபவத்தை பெற்றார். அதுமட்டுமல்ல, இயேசுவின் இந்த கட்டளைக்கு கீழ்படிந்து ஜெபித்தவர்கள் யார் யார் என்பது மிக முக்கியமானது. இயேசுவை பெற்றெடுத்த பரிசுத்த தாயாகிய மரியாள்கூட பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை ஜெபித்துதான் பெற்றார்கள். இயேசுவின் சீடர்களும் அந்த அனுபவத்தை பெற்று கொண்டார்கள். அவர்கள் எல்லாருக்கும் அது அவசியமானதாக இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்கும் அது எவ்வளவு அவசியமானது!

இரட்சிக்கப்பட்டபோதே பரிசுத்த ஆவியானவர் வந்து விடுகிறார். எனவே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது தனி அனுபவமல்ல என்று கூறுபவர்களும் உண்டு. இந்த கருத்து சரியானதல்ல. இரட்சிப்பு வேறு, பரிசுத்த ஆவியின் ஞானஸநானம் வேறு. இரட்சிக்கப்ட்ட அப்போஸ்தலர், மரியாள் பரிசுத்த ஆவியை பெற்றனர். இரட்சிக்கபபட்ட சமாரியா விசுவாசிகள் பரிசுத்த ஆவியை பெற்றார்கள் (அப்போஸ்தலர் 8:15-17). இரட்சிக்கப்பட்ட எபேசு விசுவாசிகள் பரிசுத்த ஆவியை பெற்றார்கள் (அப்போஸதலர் 19:2). சிலர் இரட்சிக்கப்படடவுடனேயே பரிசுத்த ஆவியினாலும் நிரப்ப்படுகிறார்கள். சிலர் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற்ற நேரத்திலேயே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுகிறார்கள். ஆனால் இவை தனித்தனி அனுபவங்கள் என்பதை வேத வசனங்கள் திட்டமாய் நமக்கு விளக்குகின்றன. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரை பெறவில்லை. ஏனென்றால் இந்த அனுபவம் இந்த காலத்திற்குரியதல்ல என்ற தவறாக எண்ணுகிறார்கள். இவர்கள் நடத்தும் இறையியல் கல்லூரியில் இவ்விதமாகவே போதிக்கப்படுகிறது, அதிலே படித்து பட்டம்பெற்று வரும் போதகர்களும் அதே கருத்தில் இருப்பதால் அவர்கள் போதனையும் அப்படியே இருக்கிறது. சபை போதகர் எப்படியோ அப்படித்தானே சபை மக்களும் இருப்பார்கள்!

இன்று கிறிஸ்தவர்களுக்கே பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்வதைப் பறிறி போதிக்க வேண்டியிருக்கிறது. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தால் தானாகவே கிறிஸ்தவனாகி விடுகிறான் என்ற கருத்து இருப்பதால் அந்த நிலை. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நமக்கு தேவையற்றது என்று போதிக்கப்படுவதாலும் அநேகர் அதை பெற்று கொள்ள ஆர்வப்படுவதில்லை. அதே சமயம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து பெற்று கொண்டவர்கள் எல்லா சபை பிரிவுகளிலும் இருக்கிறார்கள்.

இந்த கட்டுரையை நாம் தொடர்ந்து வரும் நாட்களிலும் காண்போம். இந்த சத்தியம் இந்த நாட்களில் மிகவும் முக்கியமானதாய் இருப்பதால், நாம் தொடர்ந்து அதை குறித்து தியானிக்க போகிறோம். இதை படிக்கும் அநேகருடைய சந்தேகங்கள் நீங்கும் என்பதில் சந்தேகமில்லை. மற்றும் அநேகர் ஆவியானவரின் அபிஷேகத்தை குறித்து கேட்டு எழுதியிருந்தபடியால் இந்த கட்டுரை வெளியாகிறது. கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.

ஆமென் அல்லேலூயா!

Wednesday, 1 October 2014

சுயத்தை வெறுத்தல்

அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். - ரோமர் 6:11.

விசுவாச வீரரான ஜார்ஜ் முல்லரிடம் ஒருமுறை வாலிபன் ஒருவன் சென்று 'உங்கள் ஊழிய வெற்றிக்கு காரணம் என்ன' என்று கேட்டான். அதற்கு அவர் 'கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன். என் சுயம் மரித்தது. அதுவே என் ஊழிய வெற்றிக்கு காரணம்' என்றார். அப்போது அந்த வாலிபன் 'ஐயா சுயத்திற்கு மரிப்பது என்றால் என்ன' என்று கேட்டான். அதற்கு அவர், 'தம்பி நீ கல்லறைக்கு போய் அங்கே எழுதப்பட்டிருக்கும் மரித்தவர்களின் பெயரை வாசித்து, அவர்களை உன மனம் போல வாய்க்கு வந்தபடிபெயல்லாம் பழித்து பேசு, பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவர்களின் பெயர்களை சொல்லி புகழ்ந்து பேசு. பிறகு என்னிடம் வா' என்று சொல்லி அனுப்பினார்.

அப்படியே இந்த வாலிபன் கல்லறைக்கு சென்று அவர்களை பழித்தும் புகழ்ந்தும் பேசி விட்டு திரும்பி வந்தான். முல்லர் கேட்டார், 'நீ கடினமாய் பேசினபோது, கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் உன் மேல் சீறினார்களா' 'இல்லை ஒரு பதிலும் பேசவில்லை' என்றான்  'நீ புகழ்ந்த போது பெருமையடைந்து உன்னை பாராட்டினார்களா' என்றார். 'இல்லை ஒன்றும் பேசவில்லை' என்றான். 'சுயம் மரித்தல் என்பது அதுதான். மற்றவர்களுடைய புகழுரை நம்மை பெருமையடையவும் செய்ய கூடாது, கடுஞ்சொற்கள் நம்மை பாதிக்கவும் கூடாது. இந்த மனநிலையை சிலுவையில் தம் ஜீவனை தந்த கிறிஸ்துவின் உதவியோடு பெற்று கொள்வது தான் சுயம் மரித்தல்' என்று முல்லர் கூறினார்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சுயம் நம்மை விட்டு நீங்கி, கிறிஸ்து நமக்குள் வாழ்கிற அனுபவம் ஆகும். அதாவது பழைய ஜென்ம சுபாவங்கள் நம்மிடமிருந்து வெளிப்படாமல், கிறிஸ்துவின் சுபாவங்கள் வெளிப்பட வேண்டும். எத்தனைதான் ஆவிக்குரியவர் என்று எண்ணப்பட்டாலும் ஒருவருடைய  ஜென்ம சுபாவங்கள் மாறுவது மிகவும் கடினமாகவே காணப்படுகிறது. வெளிப்படும் சுபாவத்தின் அடிப்படையில் நம்மிடம்  இன்னும் சுயம் வாழ்கிறதா அல்லது கிறிஸ்து வாழ்கிறாரா என அறிந்து கொள்ளலாம்.

நம்மில் பலர் ஆவிக்குரியவர்களாக பக்தி வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் குடும்பத்தில், சமுதாயத்தில், வேலை பார்க்கும் இடத்தில் நமக்கு தர வேண்டிய முக்கியத்துவமும் மரியாதையும் சற்று குறைந்து விட்டால் தாங்கி கொள்ள முடிவதில்லை. நம்முடைய நற்செயல்கள் கண்டு கொள்ளப்படாமல் போகும்போதும், நம்முடைய ஆலோசனை ஏற்று கொள்ளப்படாமற் போகும்போதும், நாம் அதிகமாய் சோர்ந்துவிடுகிறோம். அதுப்போல நாம் பாராட்டப்படும்போதும், ஒரு கூட்ட ஜனங்களுக்கு முன் கௌரவிக்கப்படும் போதும் கிறிஸ்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுகிறார். நான் என்ற எண்ணமே மேலோங்கி பெருமை தலை தூக்குகிறது. பிறரால் இகழப்படும்போது, சோர்ந்து விடுவதும், பாராட்டப்படும்போது, பெருமை அடைவதும் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவனுக்கு உகந்ததல்ல. தன்னை கிறிஸ்துவின் சிலுவையின் முன் ஜீவ பலியாய் ஒப்புக்கொடுத்தவரின் சிந்தனை இவ்விரண்டிற்கும் சாய்கிறதாய் இருக்க முடியாது.

இயேசுகிறிஸ்துவை பின்பற்றி வர விரும்பினவர்களுக்கு அவர் சொன்ன முதல் நிபந்தனை அவன் தன்னைதான் வெறுக்க வேண்டும் என்பதே. அப்படியே நம்மை வெறுக்கும்போது, எந்தவித புகழ்ச்சியும் இகழ்ச்சியும் நம்மை பாதிக்காது. கிறிஸ்துவே நம்மில் உயர்த்தப்படுவார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி - அனுதின மன்னா