Saturday, 6 September 2014

எத்தனை எளிது!

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். -  (ரோமர் 5:8).

ஒரு கடை வீதிக்கு செல்லும்போது நூறு ரூபாய் செலவு செய்வது எத்தனை எளிது, ஆனால் ஆலயத்திற்கு அந்த 100 ரூபாய் காணிக்கையாகப் போடுவது எத்தனை கடினம்!

கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க உட்காரும்போது வேகமாக இரண்டு மணிநேரம் போவது எத்தனை எளிது! ஆனால் ஜெபிக்க ஒரு மணி நேரம் உட்கார்ந்திருப்பது எத்தனை கடினம்!

தன் தோழிகளுடனோ, தோழர்களுடனோ மணிக்கணக்கில் பேசுவது எத்தனை எளிது, ஆனால், ஜெபத்தில் இரண்டு வார்த்தை சொல்லி ஜெபிப்பது எத்தனை கடினம்!

கிரிக்கெட்டில் ஒரு விளையாட்டு வீரன் ஒரு ஸிக்ஸர் அடித்தவுடன்  கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுவது எத்தனை எளிது, ஆனால் ஆலயத்தில் போதகர்  கொஞ்ச நேரம் செய்தியை இழுத்தவுடன் அமர்ந்து கேட்பது எத்தனைக் கடினம்!

ஒரு சுவையான கதை புத்தகம் கிடைத்தவுடன் அதை படித்து முடித்துவிட்டுதான் மறு வேலை என்று தொடர்ந்து படிப்பது எத்தனை எளிது, ஆனால்  வேதத்தில் ஒரு அதிகாரம் வாசிப்பது எத்தனை கடினம்!

விளையாட்டை பார்ப்பதற்கு முதல் இடத்தில் உட்காரவேண்டும் என்று எத்தனை செலவு செய்து இடத்தைப் பிடிப்பது எத்தனை எளிது, ஆனால் ஆலயத்தில் முதல் இடத்தில் உட்காருவது எத்தனை கடினம்!

தினம் செய்தித்தாளில் வரும் செய்திகளை நம்புவது எத்தனை எளிது, ஆனால் வேதத்தில் கூறப்பட்டுள்ள உண்மைகளை நம்புவது எத்தனை கடினம்!

கிறிஸ்துவை விசுவாசிக்காமல், எதையும் செய்யாமல் பரலோகத்திற்கு செல்ல விரும்புவது எத்தனை எளிது! ஆனால் அவரை விசுவாசிக்காமல், பரலோகம் செல்வது எத்தனை கடினம்!

தேவன் மனிதனை இரட்சிப்பதற்கென்று வைத்திருக்கும் திட்டம் எத்தனை எளிது, ஆனால் அதை மனிதன் ஏற்றுக் கொள்வது எத்தனைக் கடினம்!

இலவசமாய் தேவன் தருகிற இரட்சிப்பு எத்தனை எளிது, ஆனால் அதை அறியாத மனிதன் அதற்காக ஓடிஓடி படுகிற பாடுகள்தான்  எத்தனை கடினம்!

பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவது எத்தனை எளிது, ஆனால், அதற்கென்று பெற்றோர் எடுத்துக்காட்டாய் வாழ்வது எத்தனைக் கடினம்!

நம்மை எல்லாரும் மதிக்க வேண்டும், நம்மைக் குறித்து நன்றாக நினைக்க வேண்டும் என்று நினைப்பது எத்தனை எளிது, ஆனால், மற்றவர்களை மதித்து நடப்பதோ அவர்களைக் குறித்து நன்மையாக நினைப்பதோ எத்தனைக் கடினம்!

நாம் எத்தனைக் காரியங்களில் குறைவுள்ளவர்களாக காணப்படுகிறோம்!     அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. ஆனால் மற்றவர்களின் குறைகள் மாத்திரம் நம் கண்களுக்கு எத்தனை பெரிதாக தெரிகிறது!

மேலே சொல்லப்பட்டதுப் போல எத்தனையோக் காரியங்கள் நமக்கு எளிதாக இருக்கும்போது, கர்த்தருக்கடுத்தக் காரியங்கள் நமக்கு எத்தனை கடினமாக இருக்கிறது! கர்த்தரை நேசிப்போம் அப்போது எதுவும் நமக்கு கடினமாக இருக்காது. இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் இருக்கும் பிரச்சனை, நாம் நம் தேவனை உள்ளத்திலிருந்து நேசிப்பதில்லை. எல்லாவற்றையும் ஒரு கடமைக்காக செய்கிறோம். நாம் பக்தியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால், ஆவிக்குரியவர்களாக இருப்பதில்லை. மற்றவர்களுக்கு முன்பாக நாம் பக்தியுள்வர்கள்தான், ஆனால் எத்தனை தூரம் நாம் கர்த்தரை நேசிக்கிறோம் என்றால், அது 5 சதவீதம் கூட இருக்காது. கர்த்தர் நம்மை எத்தனையாய் நேசித்தபடியால் தம் ஜீவனையே நமக்காக தந்தாரே! இன்று நம்முடைய உயிர் தோழருக்காக நம் ஜீவனை கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், எத்தனைப் பேர் அதை கொடுக்க விரும்புவோம்?   நம் குடும்பம் உண்டு, யார் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எத்தனை சாக்கு போக்கு சொல்வோம்! ஆனால் நாம் பாவிகளாக இருக்கையில் அவர் நம்மேல் அன்பு கூர்ந்ததினால் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார். அது எத்தனை உண்மை!

நம் தேவன் நேசத்தை விரும்புகிற தேவன். பேதுரு பின்வாங்கிப் போய் திரும்பவும் மீன் பிடிக்க சென்ற போது, அவனது நேசத்தை விரும்பி, என்னை நேசிக்கின்றாயா? என்று ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை அல்ல, மூனறு முறை கேட்டு, அவன் வாயிலிருந்து  ‘ஆம் ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன்’  என்றுச் சொல்லும்படியாக அவனது நேசத்தை விரும்பின தேவன். ஆதியிலிருந்தே மனிதனோடு உறவாட விரும்பின தேவன் நம் தேவன். ஆபிரகாமோடே ஒரு சிநேகிதனைப் போல பேசின தேவன், மோசேயோடே முகமுகமாய் பேசின தேவன், நாமும் அவரிடம் அனுதினமும்பேச வேண்டும் என்று விரும்புகிறவர். அதற்காகவே நம்மை தெரிந்துக் கொண்டு நம்மை நேசித்தவர். அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். - (1யோவான் 4:19).

அவர் நம்மேல் வைத்த கிருபைகளை நினைத்து அவரை உள்ளத்தில் ஆழத்திலிருந்து நேசிப்போம்! அவருக்கென்று சிறிது கடினமான காரியமானாலும் பொறுமையோடு செய்வோம். கர்த்தர் அதில் மகிழுவார். நம்மை ஆசீர்வதிப்பார்!

ஆமென்...அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

No comments:

Post a Comment