Tuesday, 5 August 2014

பரிபூரண ஜீவன்

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - (யோவான் 10:20).

ஒரு வீட்டின் சொந்தக்காரர் தன் வீட்டை ஒரு இலட்சத்திற்கு விற்க விரும்பினார். அதை மற்ற ஒருவர் எப்படியாவது வாங்க வேண்டும் என முயற்சித்தார். ஆனால் அவரிடம் அந்த அளவு பணம் இல்லாததால் அந்த வீட்டு சொந்தக்காரரிடம், பேசி, கடைசியில் அரை லட்சத்திற்கு அந்த வீட்டு சொந்தக்காரர் ஒரு நிபந்தனையின் பேரில் அதை விற்க ஒப்பு கொண்டார். அதன்படி, வீட்டின் சொந்தக்காரர் வீட்டு முன் கதவின் உட்புறம் ஒரே ஒரு ஆணியை மட்டும் அடிக்கவும் அந்த வீட்டை வாங்கினவர் ஒப்புக்கொண்டார். அதன்படி, ஒரு ஆணி மாத்திரம் அந்த வீட்டின் கதவில் அடிக்கப்பட்டது.

சில வருடங்கள் கழித்து, அந்த வீட்டின் சொந்தக்காரர் அந்த வீட்டை திரும்ப பெற விரும்பினார். ஆனால் வீட்டை வாங்கினவரோ அதை திரும்ப கொடுக்க மறுத்து விட்டார். அதனால் அந்த வீட்டின் சொந்தக்காரர், போய் ஒரு மரித்த நாயின் உடலை கொண்டுவந்து, தான் அடித்திருந்த ஆணியின் மேல் மாட்டி விட்டார். ஒரு செத்த நாய் வீட்டின் உள் இருந்தால், அந்த வீட்டில் குடியிருக்க முடியுமா? உடனே அந்த வீட்டை காலிபண்ணினார்கள், அந்த வீட்டை வாங்கியிருந்தவர்கள்.

நாம் கர்த்தரை ஏற்று கொண்டபின் ஒரு சிறு பகுதியை நமக்கு என்று நம் இருதயத்தில் வைத்திருந்தாலும், சத்துரு அதை சொந்தம் கொண்டாட வருவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வாரன் என்று வசனம் நமக்கு கூறுகிறது. சாத்தானாகிய திருடன் வரும்போது, கொல்லவும் அழிக்கவும், திருடவும் தான் வருவான். அவனால், எந்த நல்ல காரியத்தையும் செய்ய முடியாது. அப்படி அவன் வரும்போது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்கையை சூறையாடவும், கர்த்தருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவை அழிக்கவும் தான் வருவானேயன்றி, வேறொன்றுக்கும் வருவதில்லை.

சாத்தான் வந்து, நம்மிடம் சொந்தம் கொண்டாடும்படி அவனுடைய  எந்த ஒரு பொருளும் நம்மிடம் இருக்க வேண்டாம். நம் முழு இருதயத்தையும் கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு, அவரை எப்போதும் நம் முழு இருதயத்தோடும் அன்பு செலுத்த வேண்டும். நம் இருதயத்தில் ஒரு சிறு இடத்தை உலகத்திற்கென்று வைத்திருந்தாலும்;, நாளாக நாளாக, அந்த சிறு இடத்திலிருந்து பாவம் நம் இருதயத்தில் பிரவேசிக்க ஆரம்பிக்கும்.

ஓவ்வொரு நாளும் கர்த்தரிடம், 'எனக்குள்  சத்துருவின் உரிமை கொண்டாடும் எந்த ஒரு காரியமும் காண்ப்பட வேண்டாம் தகப்பனே, அப்படியிருந்தால் அதை என்னை விட்டு அகற்றி போடும்' என்று ஜெபித்து, நாம் அவனை மேற்கொள்ள வேண்டும்.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் என்று இயேசுகிறிஸ்து கூறினார். சாத்தானாகிய அவன் நம் சரீர சுகத்தையும், ஆத்தும சுகத்தையும் திருட வந்தாலும், நாம் அவனுக்கு இடம் கொடுக்காதபோது, அவனுடைய பொருள் நம்;மிடம் இல்லாதிருக்கும்போது, அவன் வந்து வெட்கத்தோடு போய் விடுவான்.

இயேசுகிறிஸ்துவோ, நமக்கு ஜீவனை கொடுக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார். ஆகையால் கிறிஸ்துவை உடையவன், ஜீவனை உடையவன். கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். கிறிஸ்து இல்லாதவர்கள் உயிரோடு வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஜீவன் இருக்காது, மட்டுமல்ல, அவர்களுக்கு மறு வாழ்வில் தேவன் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு கிருபையாக தருகிற நித்திய ஜீவனும் இல்லை. இயேசுகிறிஸ்து தருகிற ஜீவன் பரிபூரண ஜீவன். அதாவது நித்திய நித்தியமான ஜீவன். அதை பெறுகிற எவரும் தாங்கள் மரித்தாலும், நித்திய நித்தியமாய் ஜீவிப்பார்கள். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே!

இயேசுகிறிஸ்து தரும் நித்திய ஜீவனை பெற்று கொண்ட நாம், சத்துரு வெட்கப்படும்படி அவனுடைய எந்த ஒரு காரியமும் நம்மில் காணப்படாதபடி நம்மை கர்த்தருக்குள் காத்து கொள்வோமாக! பரிபூரண ஜீவனை தரும் கிறிஸ்துவை பற்றி கொள்வோமாக!

ஆமென் அல்லேலூயா
நன்றி: அனுதின மன்னா

No comments:

Post a Comment