Monday, 23 June 2014

அற்பமாய் எண்ணாதிருப்போம்

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். - (மத்தேயு 18:10).

பொதுவாக நாம் நம்மை விட வயதில்இ படிப்பில்,   குறைந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. எளிதில் அவர்களை நம்பி எந்த பொறுப்பையும் கொடுப்பதில்லை. இவனுக்கு அல்லது இவளுக்கு என்ன தெரியும்? நேற்று முளைத்த காளான் என்று சொல்லி அவர்களுடைய திறமையைப் பாராமல் எளிதில் அற்பமாய் பேசி விடுகிறோம். ஆனால் வேதம் 'ஒருவரையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்' என்று நம்மை எச்சரிக்கிறது.

ஒரு 18 வயதுக்கூட நிரம்பாத ஒரு மூர்ஹவுஸ் என்ற வாலிபன் உலகப்பிரசித்திப் பெற்ற டி.எல் மூடியின் சிகாகோ நகர ஆலயத்தில் பிரசங்கிக்க விரும்புவதாக கூறினார். மூடியோ அவரை ஏற்றுக் கொள்ள சம்மதியாமல் தட்டிக் கழித்தார். ஆனால் தேவ திட்டத்தின்படி பல மாதங்களுக்குப் பிறகு மூடியின் சபையில் மூர் பிரசங்கித்தார். அநேகர் தங்களது பின்மாற்ற வாழ்விலிருந்து மனம் திரும்பினர். டீ.எல். மூடியும் கண்ணீரோடு அந்த பிரசங்கத்தை கேட்டார். அதன்பிறகு இனி யாரையும் அலட்சியமாய்ப் பார்க்க போவதில்லை என்று முடிவு செய்தார்.

வேதத்திலும் இப்படி சில வாலிபர்கள் அற்பமாய் எண்ணப்பட்டார்கள். யோசேப்பின் சொப்பனமும், அவனது பேச்சும் அவனது சகோதரர்களுக்கு அற்பமாய் காணப்பட்டது. தாவீதும் யுத்தக் களத்திலேயுள்ள தன் சகோதரர்களால் அற்பமாய் பேசப்பட்டான். ஆனால் தேவன் இவர்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அன்று பரிசேயனும் ஆயக்காரனை அற்பமாக எண்ணினான். நான் இவனைப்போலெல்லாம் இல்லை, நான் கர்த்தருக்கு விசேஷித்தமானவன் என்று மற்றவனை அற்பமாய் எண்ணினான். ஆனால் தேவனின் பார்வைக்கு ஆயக்காரனே விசேஷித்தவனாக தோன்றினான்.

இன்று நம் அலுவலகத்திலோஇ சபையிலோஇ குடும்பத்திலோ பிற அங்கத்தினர்களை நாம் ஒருவேளை அற்பமாய் எண்ணலாம். வெளிப்படையாக நாம் அதை ஒருவேளை சொல்லாமல் இருக்கலாம், ஆனால் நம் செய்கைகளினால், நம் பேச்சினால்இ நம் பார்வையினால் நான் உன்னை விட உயர்ந்தவன்இ உயர்ந்தவள் என்று காட்டிக் கொள்கிறோமா? இது தேவனுடைய பார்வையில் பாவமே!

ஒரு சகோதரன் தன்னோடு வேலை செய்யும் மற்ற சகோதரனை ஆலயத்தில் கண்டால் கண்டுக் கொள்வதில்லை. ஆனால் வேலையிடத்தில் மட்டும் மிகவும் நெருங்கினதுப் போல நடந்துக் கொள்வார். மற்ற சகோதரன் இதனால் மனம் வெறுத்துப் போனார். உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று இருந்தால் கர்த்தர் அதை அருவருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும்.

'மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்' (பிலிப்பியர் 2:3) என்றல்லவா வேதம் கூறுகிறது! ஆனால் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம்? நம்மிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டால், என்னை விட்டால் இதை செய்வதற்கு யாருமில்லை என்று நினைக்கிறோமா? தேவனால் கற்களை கொண்டும் பேச வைக்கவும், செய்ய வைக்கவும் முடியும் என்பதை நாம் அறிய வேண்டும்.

நம்மோடு இருக்கும் மற்றவர்களை நம்மிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணுவோம். அதுவே கிறிஸ்துவின் சிந்தை. இந்த சிந்தை நம் ஒவ்வொருவருக்கும் இருக்குமானால் நாம் யாரையும் அற்பமாய் எண்ணமாட்டோம். நம் தாய் தகப்பனைமாரை அற்பமாய் எண்ணாதிருப்போம். நம் கூட இருக்கும் சகோதர சகோதரிகளை அற்பமாய் எண்ணாதிருப்போம். சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளை அற்பமாய் எண்ணாதிருப்போம். நம் கூட வேலை செய்யும் மற்றவர்களை அற்பமாய் எண்ணாதிருப்போம். கிறிஸ்துவின் சிந்தையே நம்மில் இருக்கக்கடவது. மற்றவர்களை மேன்மையாய் எண்ணுவோம். அப்போது கர்த்தர் நம்மை உயர்த்துவார்.

ஆமென் அல்லேலூயா!

நன்றி அனுதின மன்னா

No comments:

Post a Comment